சிவகாசி, ஏப். 9: பங்குனி பொங்கலை முன்னிட்டு, சிவகாசி மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த கயர்குத்து விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனிப்பொங்கல் விழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும், காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் கோயில் முன்பு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
விழா முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கயர்குத்து திருவிழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்த அம்மன், பின்னர் அரிசிக் கொட்டகை மண்டபத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி வரைந்தும், ஒரு சிலர் வேப்பிலை ஆடை அணிந்து வந்தும் வழிபட்டனர். கயிறு குத்து விழவையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால் சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து ெகாண்டனர். 10ம் நாள் விழாவான நாளை தேரோட்டம் நடக்கிறது. திருவிழா நிறைவு நாளில் தெப்போற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.